Published : 04 Dec 2019 03:27 PM
Last Updated : 04 Dec 2019 03:27 PM

சிதம்பரத்தின் 106 நாள் சிறைவாசம் பழிவாங்கும் செயல்: ராகுல் காந்தி கண்டனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்கள் திஹார் சிறையில் வைத்திருந்தது மத்திய அரசின் பழிவாங்கும் செயல் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர்.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் காவலை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.


டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவைக் கடந்த மாதம் 15-ம் தேதி நிராகரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பு மேல் முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் கொண்ட அமர்வு விசாரித்து இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது. 106 நாட்களுக்குப் பின் சிதம்பரம் ஜாமீனில் விடுக்கப்பட உள்ளார்.

இந்நிலையில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பழிவாங்கும் செயல், அவரைக் காயப்படுத்த வேண்டும் என்பதற்காகச் செய்த செயல். சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். நியாயமான விசாரணையின் மூலம் சிதம்பரம் தன்னுடைய குற்றமற்ற தன்மையை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x