‘‘சிதம்பரத்துக்கு ஜாமீன்; இறுதியாக நீதி வென்றுள்ளது’’ - காங்கிரஸ் வரவேற்பு

‘‘சிதம்பரத்துக்கு ஜாமீன்; இறுதியாக நீதி வென்றுள்ளது’’ - காங்கிரஸ் வரவேற்பு
Updated on
1 min read

சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இறுதியாக நீதி வென்றுள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர்.

இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் காவலை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவைக் கடந்த மாதம் 15-ம் தேதி நிராகரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பு மேல் முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறுகையில் ‘‘சிதம்பரம் வழக்கில் இறுதியாக நீதி வென்றுள்ளது. இருந்தாலும் தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் தான். சிதம்பரத்துக்கு முன்கூட்டியே நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்க வேண்டும்.’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in