Published : 04 Dec 2019 10:59 AM
Last Updated : 04 Dec 2019 10:59 AM

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்: அமலாக்கத்துறை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர்.

இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் காவலை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவைக் கடந்த மாதம் 15-ம் தேதி நிராகரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பு மேல் முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. ப.சிதம்பரத்துக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் ‘‘2 லட்சம் ரூபாய்க்கு சொந்த ஜாமீனும் அதே தொகைக்கு நிகராக மற்றொருவர் ஜாமீனும் அளிக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வழக்கு தொடர்பாக ஊடங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது. வழக்கில் தொடர்புடையவர்களை சந்தித்து பேசக்கூடாது’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் தற்போது அமலாக்கப்பிரிவு தொடர்ந்து வழக்கிலும் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. எனவே அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x