Last Updated : 03 Dec, 2019 08:08 PM

 

Published : 03 Dec 2019 08:08 PM
Last Updated : 03 Dec 2019 08:08 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 100 நாட்களுக்கு மேலாக திஹார் சிறை: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் நாளை வழங்கப்படுகிறது.

ஐஎன்எக்ஸ் வழக்கில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 74 வயதான ப.சிதம்பரத்துக்கு நாளை ஜாமீன் கிடைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடல் நிலையைக் காரணம் காட்டியும், ஆதாரங்கள் இல்லாமல் இருப்பதையும் சிதம்பரம் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது.

ஆனால், சிதம்பரம் சக்திவாய்ந்த மனிதர். ஜாமீன் வழங்கினால் ஆதாரத்தைக் கலைத்து விடுவார் என்று அமலாக்கப் பிரிவு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த இரு வாதங்களில் எது வெல்லும் என்பது நாளை தெரியும்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர். இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் காவலை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவைக் கடந்த மாதம் 15-ம் தேதி நிராகரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பு மேல் முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜராகிய துஷார் மேத்தா, "சிதம்பரத்துக்கு எதிராக வலுவான, முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 12 வங்கிக் கணக்குகளையும், பல்வேறு நாடுகளில் 12 சொத்துகளையும் சிதம்பரம் வாங்கிக் குவித்துள்ளதையும் அமலாக்கப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. பொருளாதாரக் குற்றங்கள் மிகப்பெரிய புதை குழி. இது நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கையையும் அசைத்துவிடும்.

இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார். சிதம்பரம் சமூகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர். வழக்கில் தொடர்புடைய ஒரு சாட்சியம் எழுதிய கடிதத்தில் தயவுசெய்து சிதம்பரத்தை நேருக்கு நேர் பார்க்கும் வகையில் நிற்க வைத்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். ஆதலால், இந்த வழக்கில் ஜாமீன் வழங்கினால் சிதம்பரம் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார்" என வாதிட்டார்.

இந்நிலையில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் நாளை வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x