Last Updated : 02 Dec, 2019 08:57 PM

 

Published : 02 Dec 2019 08:57 PM
Last Updated : 02 Dec 2019 08:57 PM

சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் பெண் ஆர்வலர் மனு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழைந்து சாமி தரிசனம் செய்ய போலீஸ் பாதுகாப்பு அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பெண் ஆர்வலர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சபரிமலையில் கடந்த வாரம் திருப்தி தேசாய் வந்தபோது, உடன் வந்த கேரளாவைச் சேர்ந்த பிந்து அம்மணி மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே அடிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞரும், சட்டக்கல்லூரி பேராசிரியருமான பிந்து இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் சபரிமலை தீர்ப்பு அளித்த பின், முதன் முதலாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்து திரும்பியவரும் பிந்து அம்மணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலையில் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால், 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் அங்கு செல்ல காலம் காலமாகத் தடை இருந்து வருகிறது.

ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2018, செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

சபரிமலை தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவில் கடந்த மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம், கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடைவிதிக்கவில்லை.

இந்தத் தீர்ப்பையடுத்து, பெண் ஆர்வலர் திருப்தி தேசாய், பிந்து அம்மணி உள்பட சில பெண் ஆர்வலர்கள் கடந்த வாரம் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். கொச்சி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டபோது போலீஸார் பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டார்கள். மேலும், அங்கு பிந்து அம்மணி மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே அடிக்கப்பட்டுத் தாக்கப்பட்டார்.

இதையடுத்து சபரிமலைக்குச் செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் போதுமான பாதுகாப்பை போலீஸார் வழங்கிட கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி பிந்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

''கேரள அரசும், போலீஸாரும் கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து, பெண்களைக் கோயிலுக்கு அனுமதிக்க மறுக்கிறார்கள். அதையும் மீறி பெண்கள் சபரிமலைக்குச் சென்றால் தனிமனிதர்கள் சிலரும், சில கும்பல்களும் சேர்ந்து தாக்குதல் நடத்துகின்றன. இதைத் தடுக்க உத்தரவிடவேண்டும்.

கடந்த மாதம் 26-ம் தேதி சபரிமலைக்கு நான் செல்ல முயன்று, போலீஸ் பாதுகாப்பு கேட்டு எர்ணாகுளம் சென்றேன். அப்போது போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் என் மீது தாக்குதல் நடத்தி, சில ரசாயன திரவங்கள் முகத்தில் ஊற்றப்பட்டன.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கடந்த 2018-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் தடை ஏதும் விதிக்கவில்லை.

ஆதலால், சபரிமலைக்கு வரும் பெண்களின் வயதுச் சான்றிதழை சரிபார்க்கும் போலீஸாரின் செயலை உடனடியாக நிறுத்தக் கோரியும், 10 வயதுக்கு மேற்பட்ட பெண்களை நுழையவிடாமல் தடுக்கும் வகையில் போலீஸார் ஆலோசனைகள் கூறுவதையும் நிறுத்தவும் உத்தரவிட வேண்டும்.

10 வயதுமுதல் 50 வயதுள்ள பெண்கள் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், அச்சமான சூழல், சட்டம் ஒழுங்கு இல்லாததால் செல்ல முடியவில்லை.

சபரிமலைக்கு வழிபாடு செய்யவரும் பெண்களை நீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அவர்களை அனுமதிக்க வேண்டும். ஆனால், ஏதாவது காரணத்தைக் கூறி பெண்களுக்குப் பாதுகாப்பு தர முடியாது என்று ஒரு பொறுப்புள்ள அரசு செய்யக்கூடாது. ஆதலால், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடவேண்டும்''.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x