பாலியல் பலாத்காரம்; கடுமையான சட்டங்களை உருவாக்கத் தயார்: மக்களவையில் ராஜ்நாத் சிங் உறுதி

பாலியல் பலாத்காரம்; கடுமையான சட்டங்களை உருவாக்கத் தயார்: மக்களவையில் ராஜ்நாத் சிங் உறுதி
Updated on
1 min read

ஹைதராபாத் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு போன்ற கொடூரமான குற்றங்களை ஆராய்ந்து, சட்டத்தில் வலுவான விதிமுறைகளைச் செயல்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் கூறினார்.

ஹைதராபாத்தில் 25 வயதான கால்நடை பெண் மருத்துவர் கடந்த வாரம் புறநகரில் சிலரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் எரிந்த நிலையில் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. அங்குள்ள டோல் பிளாசா அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியின் பின்புற டயரைப் பழுதாக்கி, பாதிக்கப்பட்டவரை தங்கள் சதிவலைக்குள் நயவஞ்சகமாக சிக்க வைத்தனர். இதில் தொடர்புடைய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சைபராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. சமாஜ்வாதிக் கட்சியின் பெண் எம்.பி. ஜெயா பச்சன், அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இந்தப் பிரச்சினையை எழுப்பினர்.

கேள்வி நேரத்தின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ''ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது நாடு முழுவதும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செயல் நம் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அனைவரையும் காயப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவர்கள் செய்த குற்றத்திற்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் அகற்றவும், முழு சபையும் ஒப்புக் கொள்ளும் மாதிரியான சட்டத்தை உருவாக்க நாங்கள் தயாராக உள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in