

சியாச்சின் மலைப்பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்து வருகிறது. மலைச் சிகரங்களில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது.
காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் மலைப்பகுதி அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலைப்பகுதி, உலகின் மிக உயரமான போர்க்களமாகும். சியாச்சின் மலைப் பகுதியில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. இந்த ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சியாச்சின் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
தகவலறிந்து ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் விரைந்து சென்ற மீட்புப் படையினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.