Published : 30 Nov 2019 11:07 AM
Last Updated : 30 Nov 2019 11:07 AM

கிலோ ரூ. 35-க்கு வெங்காயம்; தள்ளுமுள்ளு, கல்வீச்சு: ஹெல்மெட் அணிந்து ஊழியர்கள் விற்பனை

ஆரா 

பிஹார் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் நேரடியாக மக்களுக்கு கிலோ ரூ. 35 என்ற விலையில் விற்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது.

நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன.

வெங்காயத்தின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நாடுகளில் இருந்து கடல் வழியாக 80 முதல் 100 கண்டெய்னர்கள் அளவுக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ரூ. 35-க்கு வெங்காயம்

இதனிடையே பொதுத்துறை நிறுவனமான தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை நிலையம் மூலம் எகிப்தில் இருந்து வெங்காயம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

எகிப்தில் இருந்து 6090 டன்கள் வெங்காயம் மும்பை துறைமுகத்துக்கு விரைவில் வந்து சேரும் என நுகர்வோர் நலத்துறை செயலாளர் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி மாநில நுகர்வோர் கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலமாகவும் வெங்காயம் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிஹார் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் நேரடியாக மக்களுக்கு கிலோ ரூ. 35 என்ற விலையில் விற்கப்படுகிறது.

ஆரா உட்பட பல பகுதிகளில் வெங்காயத்தை வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அப்போது வெங்காயம் வாங்க தள்ளு முள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் வெங்காயம் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் வெங்காயம் விற்பனை செய்யும் ஊழியர்கள் ஹெல்மெட் மாட்டியபடி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x