

குற்றவாளிகளை பொதுவில் ஏன் தூக்கிலிடக்கூடாது? என்று பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி காணாமல் போனதாகப் பெற்றோர் போலீஸில் புகார் அளித்த நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தி இணைய வாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. மேலும், பிரியங்கா ரெட்டி மரணத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில் “இது போன்ற விஷயங்கள் நடக்க மீண்டும் மீண்டும் அனுமதிக்கும் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். எதுவும் மாறுவதில்லை.
இப்படியான குற்றவாளிகளுக்கு எதிராக ஏன் நாம் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரக்கூடாது. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட, பொதுவில் அவர்களை ஏன் தூக்கிலிடக்கூடாது. பிரியங்கா ரெட்டிக்கு உங்கள் கவனம் தேவை பிரதமர் மோடி அவர்களே.” என்று தெரிவித்துள்ளார்.