Last Updated : 29 Nov, 2019 02:49 PM

 

Published : 29 Nov 2019 02:49 PM
Last Updated : 29 Nov 2019 02:49 PM

கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, ஹெச்.டி. குமாரசாமி மீது தேசத் துரோக வழக்குப் பதிவு

பெங்களூரு வருமானவரித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தியதற்காக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, ஹெச்.டி.குமாரசாமி உள்ளிட்ட 17 பேர் மீது பெங்களூரு போலீஸார் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதாக முன்னாள் போலீஸ் ஆணையர் டி.சுனில் குமார் மீதும், வழக்குப் பாய்ந்துள்ளது.

தும்கூரைச் சேர்ந்த ஏ.மல்லிகார்ஜூன என்பவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின் பெயரில் இந்த வழக்குகளை பெங்களூரு போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தபின், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர்களின் பெங்களூரு, மாண்டியா, ஹசன், மைசூரு, சிவேமோகா ஆகிய இல்லங்களில் வருமானவரித் துறையினர் கடந்த காலங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டது. அரசியல் உள்நோக்கத்துடன் சோதனை நடத்துகின்றனர் என்று இரு கட்சியினரும் குற்றம்சாட்டினர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த மார்ச் மாதம் பெங்களூருவில் உள்ள வருமானவரித் துறை தலைமை அலுவலகம் முன் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ஜேடிஎஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி,துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, டி.கே.சிவக்குமார், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். .

இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. மக்களுக்கு இடையூறு விளைவித்த அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரிடமும், தேர்தல் ஆணைத்திடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆதலால் இந்த அரசியல்தலைவர்கள், நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மல்லிகார்ஜூனா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்

இதையடுத்து பெங்களூரு போலீஸாருக்கு உத்தரவிட்ட பெங்களூரு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, ஐபிசியில் 22 பிரிவின் கீழ் பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இதில் பிரிவு 121 அதாவது இந்திய அரசுக்கு எதிராகப் போர் செய்தல் எனும் பிரிவு, பிரிவு 153(கலவரத்தை தூண்டுதல்), பிரிவு 149(சட்டவிரோதமாகக் கூடுதல்), பிரிவு 353(அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல்), பிரிவு 506, 405 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

சித்தராமையா, ஹெச்.டி.குமாரசாமி,துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, டி.கே.சிவக்குமார், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், எல்.ஆர்.சிவரமே, முனிரத்ன நாயுடு, மூத்த போலீஸ் அதிகாரி டிசிபி ராகுல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x