

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "பதிவியிருந்து விலகிய அமைச்சர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும். அப்போதுதான் புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்கள் அவற்றில் குடியேற முடியும்" என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்டுவதற்கு, வங்கிகளில் வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்படுவது அவசியம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தருவதற்கு புதிய அரசு முன்னுரிமை அளிக்கும். வீட்டுக் கடன் வட்டி குறைப்பது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் ஆலோசிக்க உள்ளேன்" என்றார்.