Last Updated : 29 Nov, 2019 10:05 AM

 

Published : 29 Nov 2019 10:05 AM
Last Updated : 29 Nov 2019 10:05 AM

பதவி விலகி 2 நாள்: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்தி்ர பட்னாவிஸுக்கு நாக்பூர் போலீஸார் சம்மன்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ்க்கு நாக்பூர் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தேர்தலில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தபோது அதில் நிலுவையில் இருந்த 2 கிரிமினல் வழக்குகள் குறித்து எந்தவிதமான குறிப்பும் தெரிவிக்காததையடுத்து, அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த 2 நாட்களிலேயே போலீஸார் பட்னாவிஸுக்கு சம்மன் அனுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாக்பூரில் உள்ள பட்னாவிஸ் இல்லத்துக்கு நாக்பூர் சாதர் போலீஸ் நிலையம் இந்த சம்மனை அனுப்பியுள்ளது.
நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஸ் உகே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் தேர்தலில் பிரமாணப்பத்திரத்தில் பட்னாவிஸ் தன் மீது இருக்கும் இரு கிரிமினல் வழக்குகள் குறித்துக் குறிப்பிடவில்லை

கடந்த 1996, மற்றும் 1998-ம் ஆண்டு பட்னாவிஸ்க்கு எதிராக மோசடி மற்றும் ஏமாற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இந்த வழக்கில் அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இரு வழக்குகள் குறித்தும் பட்னாவிஸ் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை.

இந்த வழக்கில் பட்னாவிஸ்க்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த வழக்கை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தேவேந்திர பட்னாவிஸ் வழக்குத் தொடர்ந்தார். பட்னாவிஸ் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாஜிஸ்திரேட் உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் பட்னாவிஸ் மேல்முறையீடு செய்திருந்தார். பட்னாவிஸ் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பட்னாவிஸ் மீதான விசாரணையைத் தொடரத் தடையில்லை எனத் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எஸ்.டி.மேத்தா கடந்த 4-ம்தேதி பட்னாவிஸ்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், " மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் குற்ற விவரங்களை மறைத்தது தண்டனைக்குரிய குற்றம். அதற்கு விளக்கம் தாருங்கள்" என்று நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாக்பூர் போலீஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. இதையடுத்து, பட்னாவிஸுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x