Published : 29 Nov 2019 07:23 AM
Last Updated : 29 Nov 2019 07:23 AM

சந்திரபாபு நாயுடு பயணம் செய்த பஸ் மீது கற்கள், காலணி வீச்சு

ஆந்திர பிரிவினைக்கு பிறகு விஜயவாடா குண்டூர் இடையே அமராவதி என்ற பெயரில் புதிய தலைநகரை உருவாக்கும் முயற்சியில் முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு ஈடுபட்டது. இதையொட்டி தற்காலிக தலைமைச் செயலம் மற்றும் சட்டப்பேரவைக்காக சில கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்நிலையில் தலைநகர் மாற்றப்படும் என அமைச்சர்களில் சிலர் கூறி வருவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தனது கட்சி நிர்வாகிகளுடன் அமராவதியில் நேற்று பஸ்ஸில் பயணம் மேற்கொண்டார். ஓரிடத்தில் இவர்களின் பஸ் மீது ஆளும் கட்சியினர் திடீரென கற்கள் மற்றும் காலணிகள் வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி இவர்களை கலைத்தனர்.

சந்திரபாபு நாயுடு அமராவதியில் தனது ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களை பார்வையிட்டார். தலைநகருக்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் விழுந்து கும்பிட்டார். பின்னர் அவர் கூறும்போது, “அமராவதியில் கடந்த ஆட்சியில் எதுவும் கட்டப்படவில்லை என்றும் மயானம் போல் உள்ளதாகவும் ஆளும் கட்சியினர் கூறி வருகின்றனர். அவர்கள் ஆட்சி செய்வதே இங்கிருந்துதான் என்பது மக்களுக்குத் தெரியும். நாங்கள் இங்கு போர் புரிய வரவில்லை. ஆனால் எங்களை தாக்க முயற்சி நடந்தது. அமராவதியை உருவாக்குவதில் ஜெகன் அரசு தாமதம் செய்வது ஏன்?” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x