ராமர் கோயில் அறக்கட்டளை தலைவராக ஆர்எஸ்எஸ் நிர்வாகி: யோகி ஆதித்யநாத் கலந்துகொண்ட கூட்டத்தில் வலியுறுத்தல் 

ராமர் கோயில் அறக்கட்டளை தலைவராக ஆர்எஸ்எஸ் நிர்வாகி: யோகி ஆதித்யநாத் கலந்துகொண்ட கூட்டத்தில் வலியுறுத்தல் 
Updated on
1 min read

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) நிர்வாகியை, ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையின் தலைவராக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வாரணாசியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக சார்பில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்துகொண்டார்.

அயோத்தியில் ராமர் கோயில் மீதான மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 9 ஆம் தேதி அளித்தது. இதன் உத்தரவின்படி 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஒரு அறக்கட்டளை அமைக்கிறது. இதன் தலைவர் பொறுப்பைப் பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்றது. நேற்று முன்தினம் வாரணாசியில் நிகழ்ந்த இக்கூட்டத்தில் பாஜக சார்பில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

இதில், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவராக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரையே தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தரப்பினர் கூறும்போது, ''இந்த அறக்கட்டளைக்கு தலைமை ஏற்பதிலும், முக்கிய அங்கம் வகிப்பதிலும் அயோத்தி சாதுக்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், கோயில் பணிக்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க அதன் தலைவராக ஆர்எஸ்எஸ் தம் நிர்வாகிகளுள் ஒருவரை அமர்த்தும்படி மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தனர்.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான போராட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத்தினர் (விஎச்பி) முக்கியப் பங்கு வகித்தனர். பாஜகவின் சக அமைப்பான விஎச்பி சார்பில் கோயில் கட்டுவதற்காக 1985 ஆம் ஆண்டு ஸ்ரீராமஜென்ம பூமி நியாஸ் எனும் அறக்கட்டளை அமைந்துள்ளது.

எனவே, தம் அறக்கட்டளையே கோயிலைக் கட்டும் எனவும், புதிதாக அதை அமைக்கத் தேவையில்லை என்றும் விஎச்பி வலியுறுத்தி வருகிறது. இப்பிரச்சினையில் அயோத்தியின் முக்கிய சாதுக்கள் இடையே மோதலும் நிலவுகிறது.

இத்துடன், அயோத்தியில் மேலும் இரண்டு சாதுக்களின் அறக்கட்டளையான ஸ்ரீராமஜென்ம பூமி ராமாலாயா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராமஜென்ம பூமி கோயில் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும் தம்மையே தலைவராக்கவும் வலியுறுத்துகின்றனர்.

இதுபோன்ற எதிர்ப்புகளைச் சமாளிக்க, விஎச்பியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தான் சரியான தேர்வு என திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் மீதான இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in