Last Updated : 28 Nov, 2019 06:30 PM

 

Published : 28 Nov 2019 06:30 PM
Last Updated : 28 Nov 2019 06:30 PM

குவைத்தில் கைப்பேசி செயலியின் மூலமாக இளம்பெண்கள் விற்பனை: இந்திய அரசின் நடவடிக்கை என்ன?- மக்களவையில் ரவிக்குமார் கேள்வி

புதுடெல்லி

குவைத் நாட்டில் வேலை அளிப்பதாகக் கூறி கைப்பேசி செயலி மூலம் இளம்பெண்கள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதற்கு இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. டி.ரவிக்குமார் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து மக்களவையின் கேள்வி நேரத்தில் டி.ரவிக்குமார் பேசும்போது, ''குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்வதற்காக பெண்கள் தேவை என்று மொபைல் ஆப் மூலம் விளம்பரம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், பெண்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது நவீன கால அடிமை வணிகமாகும். இது உண்மைதானா? அவ்வாறெனில் அரபு நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்யும் நமது நாட்டுப் பெண்களைப் பாதுகாப்பதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?'' என்று கேட்டார்.

இதற்கு மக்களவையில் இன்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் தனது எழுத்துபூர்வமான பதிலில் கூறுகையில், ''குவைத் நாட்டின் சட்டங்கள் ஆட்கடத்தலுக்கு எதிராக உள்ளன. எனவே, அந்நாட்டு அரசு உடனடியாக அத்தகைய செயலி மற்றும் இணையதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. அங்குள்ள இந்தியத் தூதரகமும் இந்த முறைகளில் பணியமர்த்துவதற்கு குவைத் அரசிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்த வகையில் இதுவரை பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்கள் எவரும் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவில்லை.

வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியப் பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது'' என்று தெரிவித்தார்.

மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விவரமான அறிக்கையை மக்களவையில் தனது பதிலில் சமர்ப்பித்தார். அதன் விவரங்கள் பின்வருமாறு:

ஈசிஆர் பாஸ்போர்ட் (ECR- Emigration Check Required) மூலமாக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் செவிலியர்கள் தவிர பிற பணியாளர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இசிஆர் பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியப் பெண் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும் என்றால் அத்தகைய இசிஆர் ஏற்பாடு உள்ள 18 நாடுகளும் இந்திய அரசு நிறுவனங்களின் மூலமாகத்தான் பணியமர்த்தம் செய்ய வேண்டும்.

வெளிநாட்டு பணிக்கான இந்திய நிறுவனங்கள்

இதற்கான பணியில் தற்போது NORKA, கேரளாவைச் சேர்ந்த ODEPC,தமிழ்நாட்டின் OMCL,உத்தரப் பிரதேசத்தின் UPFC, ஆந்திர மாநிலத்தின் OMCAP,தெலங்கானா மாநிலத்தின் TOMCOM, கர்நாடகாவின் KUWSSB, மற்றும் KVTSDC உள்ளிட்ட 9 நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்திய தூதரகத்தின் அனுமதி அவசியம்

அயல்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்திய பெண் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் பெண் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2500 அமெரிக்க டாலர் வீதம் காப்புத் தொகையை அந்நாட்டின் இந்திய தூதரகத்தில் செலுத்த வேண்டும்.

இசிஆர் பாஸ்போர்ட் வைத்துள்ள பெண் தொழிலாளர்களை பணி அமர்த்துவதற்கு அந்தந்த நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் அனுமதி அவசியம் என்று விதி உள்ளது.

வளைகுடா நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்யும் இந்திய பெண்கள் அனைத்து விவரங்களும் கொண்ட டேட்டா பேஸை உருவாக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. ஏனெனில், அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் பலரும் ஈசிஎன்ஆர் (Emigration Check Not Required - ECNR) பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.

சுற்றுலா மற்றும் குடும்ப விசா அனுமதி

அதனால் அவர்கள் இந்தியாவிலிருந்து போகும்போது அனுமதி பெறவோ பதிவு செய்யவோ தேவை எதுவுமில்லை. அதுமட்டுமின்றி வளைகுடா நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாகச் செல்லும் பெண்கள் சுற்றுலா விசா அனுமதி மற்றும் குடும்ப விசா மூலமாக செல்கின்றனர்.

இ-மைக்ரேட் முறை

இவர்கள், அதன்பிறகு அங்கு பணியாளர்களாக வேலை செய்கின்றனர். இப்படியானவர்களும் பதிவுசெய்யவோ அனுமதி பெறவோ தேவையில்லை. அரசிடம் அனுமதிபெற்று அயல் நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக வேலைக்குச் செல்லும் பெண்கள் குறித்த விவரங்கள் இ-மைக்ரேட் (E-Migrate) முறையில் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகப் பெண்கள் அதிகம்

2015 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 31, 2019 வரை இமிக்ரேஷன் கிளியரன்ஸ் வழங்கப்பட்ட அத்தகைய பெண் தொழிலாளர்களின் விவரங்களையும் நாடு வாரியாக அமைச்சர் அளித்துள்ளார். அதில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டுப் பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் அரபு நாடுகளில் பணி செய்து வருவது தெரியவந்துள்ளது.

அயல்நாட்டுப் பணியாளர்களுக்கு தனி அமைச்சகம் கோரிக்கை

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான டி.ரவிக்குமார் கூறும்போது, ''அயல்நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கென தனியே ஒரு அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்கவேண்டும் என நான் எம்எல்ஏவாக இருந்தபோதே வலியுறுத்தினேன். அந்தக் கோரிக்கையை இப்போதாவது தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இதை, தமிழகத்தின் மற்ற அரசியல் கட்சிகள் வலியுறுத்தவேண்டும்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x