Last Updated : 28 Nov, 2019 03:16 PM

 

Published : 28 Nov 2019 03:16 PM
Last Updated : 28 Nov 2019 03:16 PM

ஐஎன்எக்ஸ் வழக்கு; ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு: சாட்சியங்கள் வர அச்சம்- உச்ச நீதிமன்றத்தில் வாதம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ப.சிதம்பரம் முன் சாட்சியங்கள் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். சாட்சியங்களைக் கலைத்து விடுவார்கள் என்று அமலாக்கப் பிரிவு தரப்பில் வாதிடப்பட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர்.

இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் காவலை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பு மேல் முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி,ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அமலாக்கப் பிரிவு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆஜராகினர்.

அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜராகிய துஷார் மேத்தா, சிதம்பரத்துக்கு எதிராக கடும் வாதங்களை முன்வைத்து ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதிடுகையில், "சிதம்பரத்துக்கு எதிராக வலுவான, முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 12 வங்கிக் கணக்குகளையும், பல்வேறு நாடுகளில் 12 சொத்துகளையும் சிதம்பரம் வாங்கிக் குவித்துள்ளதையும் அமலாக்கப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. பொருளாதாரக் குற்றங்கள் மிகப்பெரிய புதை குழி. இது நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கையையும் அசைத்துவிடும்.

இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார். சிதம்பரம் சமூகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர். வழக்கில் தொடர்புடைய ஒரு சாட்சியம் எழுதிய கடிதத்தில் தயவுசெய்து சிதம்பரத்தை நேருக்கு நேர் பார்க்கும் வகையில் நிற்க வைத்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். ஆதலால், இந்த வழக்கில் ஜாமீன் வழங்கினால் சிதம்பரம் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார்" என வாதிட்டார்.

ஆனால், கபில் சிபல் வாதிடுகையில்," சிதம்பரத்துக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமலாக்கப் பிரிவிடம் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்று கூறவும் ஆதாரங்கள் இல்லை" எனத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, வழக்கின் ஆதாரங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்ய அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x