Published : 28 Nov 2019 08:23 AM
Last Updated : 28 Nov 2019 08:23 AM

500-க்கும் மேற்பட்ட கூகுள் இந்தியப் பயனாளர்களை அரசு ஆதரவுடன் வேவு: கூகுள் ஆய்வில் தகவல்

கூகுளின் சிஸ்டம்கள் மற்றும் கூகுள் பயனாளர்களை அரசு வேவு பார்த்து அவர்களது சொந்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியுமா? கூகுள் என்ற மாபெரும் தேடல் எந்திரத்தின் புதிய ஆய்வு ஒன்று , ‘ஆம் எந்த அரசும் கூகுள் பயனாளர்களின் சொந்த விவரங்களை வேவு பார்க்கிறது’ என்று தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூகுளின் ‘அச்சுறுத்தல் பகுப்பாய்வு குழு’ (Threat Analysis Group-TAG) தனது ஆய்வறிக்கையில் கூறும்போது சுமார் 149 நாடுகளின் 12,000த்திற்கும் மேற்பட்ட கூகுள் பயனாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை அனுப்பியுள்ளது. அதாவது அரசு ஆதரவுடன் ஹேக் செய்பவர்களின் வேவு வலையில் சிக்குகிறார்கள் என்று கூகுள் எச்சரித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 500க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட பயனாளர்களின் கூகுள் நடவடிக்கைகளை அரசு ஆதரவு ஹேக்கர்கள் வேவு பார்க்கின்றனர் என்று இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எதேச்சதிகாரம் நிலவும் சீனாவைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனாலும் கூகுள் பயனாளர்களை வேவு பார்ப்பதில் இந்திய அரசு ஆதரவு ஹேக்கர்கள் அவ்வளவு மோசமில்லை என்று கூறும் இந்த அறிக்கை அமெரிக்காவில் சுமார் 1000த்திற்கும் அதிகமாக அரசு ஆதரவுடன் கூகுள் பயனாளர்கள் கணக்குகள் வேவு பார்க்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது.

பாகிஸ்தான், வியட்நாம் லாவோஸ் தென் கொரியா போன்ற நாடுகளிலும் சுமார் 500 முதல் 1000 வேவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக அரசு வேவு பார்ப்பவர்களில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அரசியல் பிரச்சாரகர்கள் போன்றவர்கள் அதிகமாக அரசினால் வேவுக்காக குறிவைக்கப்படுகின்றனர் என்கிறது இந்த ஆய்வறிக்கை.

கூகுள் ஆய்வு பிரிவைச் சேர்ந்த ஷேன் ஹன்ட்லி என்பவர் சமீபத்தில் தனது வலைப்பதிவில் கூறும் போது, “பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரகர்கள் ஆகியோர் எங்களது ‘அட்வான்ஸ்டு புரடெக்சன் புரோகிராம்’ (Advanced Protection Program-APP) என்பதில் இணயுமாறு ஊக்குவித்து வருகிறோம். இது எந்த ஒரு ஹேக்கர்களிடமிருந்து பயனாளர்களை பாதுகாக்கும்” என்றார்.

இந்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றும் புதிதல்ல, பேஸ்புக்கின் மற்றொரு நிறுவனமான வாட்ஸ்-அப் சமீபத்தில் ‘பெகாசஸ்’ என்ற மென்பொருள் பற்றி எச்சரிக்கை விடுத்திருந்தது. பெகாசஸ் மென்பொருளுக்குச் சொந்தமான என்.எஸ்.ஓ என்ற இஸ்ரேல் குழுமத்தின் மீது வாட்ஸ் அப் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிட்ட செல்போன்களை ஹேக் செய்வதற்கான இணைப்புகளை அனுப்பியதாக இந்த நிறுவனத்தின் மீது வாட்ஸ் அப் வழக்கு தொடர்ந்துள்ளது, குறிப்பாக பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய சுமார் 1,400 போன் கருவிகள் இலக்காக்கப்பட்டுள்ளன, இதில் பெரும்பாலும் இந்தியாவின் பயனாளர்கள் அடங்குவர் என்று கூறியிருந்தது.

யார் யாரெல்லாம் இப்படி அரசின் கண்காணிப்பு வலையில் சிக்குகிறார்களோ அவர்களின் பாஸ்வேர்டுகளை முதலில் எப்படியாவது பெற்று அவர்களின் முழு நடவடிக்கைகளையும் அரசு கண்காணித்து விடும் என்று கூறுகிறது கூகுள் அறிக்கை.

-கட்டுரை ஆசிரியர்: வருண் அகர்வால், தி இந்து பிசினஸ்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x