

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டம் தோல்வி அடைந்தால் மூடப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.
ஏர் இந்தியா நிறுவனம் ரூ.58 ஆயிரம் கோடி கடன் சுமையில் உள்ளது. இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை மட்டும் விற்க அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் யாரும் முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்க மார்ச் மாதம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டால் விமானிகள் பதவி விலக வேண்டுமா என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் சாதகமான விஷயம் நடக்க உறுதி செய்யப்படும். இதுவரை என்னால் இந்த அவையில் கூற முடியும்.
அதேசமயம், ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சி, விற்பனை செய்யும் முயற்சி தோல்வி அடைந்தால், ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படும்" எனத் தெரிவித்தார்.