Published : 27 Nov 2019 10:59 AM
Last Updated : 27 Nov 2019 10:59 AM

மார்ச் மாதத்துக்குள் 13 செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

வரும் மார்ச் மாதத்திற்குள் 13 செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் என, இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

கார்ட்டோசாட் - 3 என்ற செயற்கைக்கோளை, 'பி.எஸ்.எல்.வி. - சி46' ராக்கெட் உதவியுடன், 'இஸ்ரோ' புதன்கிழமை (நவ.27) காலை விண்ணில் செலுத்தியது.

கார்ட்டோசாட் - 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய இஸ்ரோவின் தலைவர் கே.சிவன், பிஎஸ்எல்வி - சி 47 ராக்கெட் மூலம் கார்ட்டோசாட் - 3 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

கார்ட்டோசாட் -3 மற்றும் அதனுடன் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் அவற்றின் புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்டதாகக் கூறினார். கார்ட்டோசாட் - 3 செயற்கைக்கோளில் துல்லியமாகப் படமெடுக்கக்கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய திட்ட இயக்குநர் மற்றும் ஒட்டுமொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அவர் தமது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பார்கள் என்றும் சிவன் தெரிவித்தார்.

அடுத்தகட்டமாக, வருகிற மார்ச் மாதத்திற்குள் 13 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிவன் குறிப்பிட்டார். 6 செலுத்து வாகனங்கள் மற்றும் 7 செயற்கைக்கோள்கள் மார்ச் மாதத்திற்குள் விண்ணில் செலுத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x