‘‘வாய்மையே வெல்லும்; பாஜகவின் விளையாட்டு முடிவுக்கு வந்தது’’- தேசியவாத காங்கிரஸ் கடும் சாடல்

நவாப் மாலிக் - கோப்புப் படம்
நவாப் மாலிக் - கோப்புப் படம்
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு முதல்வர் பட்னாவிஸ் பதவி விலகியதன் மூலம் பாஜகவின் விளையாட்டு முடிவுக்கு வந்துள்ளது, அஜித் பவார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால் அவரை சரத் பவார் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வார் என தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் கூறினார்.

மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.

சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

ஆளுநர் கோஷ்யாரியின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீது இரு நாட்களாக விசாரணை நடந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அதில், " நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது" என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் அஜித் பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து முதல்வர் பட்னாவிஸும் பதவி விலகினார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:

தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை நாளைக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுமே பாஜகவின் விளையாட்டு முடிவுக்கு வந்து விட்டது. பெரும்பான்மை இல்லாத பாஜக முதல்வர் பட்னாவிஸ் பதவி விலகி விட்டார். வாய்மையே வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது.

இனிமேல் அஜித் பவார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால் அவரை சரத் பவார் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வார். அத்துடன் இந்த பிரச்சினை நிரந்தரமாக முழுமையாக முடிவுக்கு வந்துவிடும். முன்று கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கும்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in