

மகாராஷ்டிராவில் நாளை தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திடீரென துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.
சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
ஆளுநர் கோஷியாரியின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீது இரு நாட்களாக விசாரணை நடந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அதில் " நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆளுநர் பகத்சிங் கோஷியாரி நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது" என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் திடீரென துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றியும், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ் 3.30 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில் ‘‘துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். தற்போது அவர் எங்கள் பக்கம் வந்து விட்டார். 5 ஆண்டுகளுக்கும் உத்தவ் தாக்கரே தான் முதல்வராக பதவி வகிப்பார்’’ எனக் கூறினார்.