Published : 26 Nov 2019 02:13 PM
Last Updated : 26 Nov 2019 02:13 PM

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுத்தாக்கல் இல்லை: சன்னி வக்போர்டு முடிவு

சன்னி வக்போர்டு மூத்த உறுப்பினர் அப்துல் ரசாக் கான்

லக்னோ

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என உத்தர பிரதேச மாநில மத்திய சன்னி வக்போர்டு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு மற்றும் மனுதாரர்கள் சிலரும் முடிவெடுத்துள்ளனர்.

எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, ஷியா வக்போர்டு ஆகியவை மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன.

ஆனால் அயோத்தி வழக்கில் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு தலைவர் சுபர் பரூக்கி தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டதாக மூத்த உறுப்பினர் அப்துல் ரசாக் கான் உள்ளிட்ட சிலர் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் அயோத்தி விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக உ.பி. சன்னி வக்போர்டு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உ.பி.

உ.பி. மத்திய சன்னி வக்போர்டு தலைவர் சுபர் பரூக்கி கூறுகையில்‘‘வக்போர்டு அனைத்து உறுப்பினர்களும் கலந்து பேசினோம். மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வதில்லை என கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம். அதேசமயம் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வது குறித்து ஒத்தக் கருத்து ஏற்படவில்லை. எனவே இதபற்றி முடிவெடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது’’ எனக் கூறினார்.

இதுபோலவே உ.பி. மத்திய சன்னி வக்போர்டு மூத்த உறுப்பினர் அப்துல் ரசாக் கான் உள்ளிட்டோரும் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வதில்லை என்ற முடிவை ஏற்பதாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x