மகாராஷ்டிர விவகாரம்; உச்ச நீதிமன்ற உத்தரவு எங்களுக்குப் பின்னடைவு அல்ல: பாஜக கருத்து

பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் நலின் கோலி :படம் உதவி ட்விட்டர்
பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் நலின் கோலி :படம் உதவி ட்விட்டர்
Updated on
1 min read

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எந்தவிதத்திலும் பாஜகவுக்குப் பின்னடைவு அல்ல என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.

சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

ஆளுநர் கோஷ்யாரியின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீது இரு நாட்களாக விசாரணை நடந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அதில், "நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது" என்று உத்தரவிட்டது.

இதுகுறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நலின் கோலி டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ''மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பட்னாவிஸ் அரசு நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எந்தவிதத்திலும் பாஜகவுக்குப் பின்னடைவு அல்ல. அரசியலமைப்பு தொடர்பான சிக்கலான நேரங்களில் நீதிமன்றத்தின் உத்தரவுகள் எந்தவிதத்திலும், எந்தக் கட்சிக்கும் பின்னடைவாக இருக்காது.

மாறாக நீதிமன்றத்தின் உத்தரவுகள் அரசியலமைப்பை வலுப்படுத்தவே செய்யும். அரசியல் கட்சிகள் ஒருபுறம் அரசியலமைப்பு மதிப்புகளையும், மாண்புகளையும் பேசிக்கொண்டு, மற்றொரு புறம் அரசியலமைப்புச் சட்ட நாளில் நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தைப் புறக்கணிப்பது அரசியலில் போலித்தனமாகவும், முரணாகவும் இல்லையா?

அவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நம்பிக்கை வாக்கெடுப்புதான் சரியானது என்று எஸ்ஆர் பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் முழுமையான விவரம் தெரிந்துவிடும்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in