Last Updated : 26 Nov, 2019 11:13 AM

 

Published : 26 Nov 2019 11:13 AM
Last Updated : 26 Nov 2019 11:13 AM

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு; 5 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்: நேரலை அவசியம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிராவி்ல பாஜக தலைமையிலான அரசில் முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நாளை மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின. யாரும் எதிர்பாராத சூழலில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.

ஆனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

ஆளுநர் கோஷியாரின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் நீக்கியது தொடர்பான கடிதங்கள், தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அளித்த எம்எல்ஏ ஆதரவுக் கடிதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிவசேனா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், காங்கிரஸ் என்சிபி சார்பில் அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகினர்.

கடந்த இரு நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் இரு தரப்பிலும் வாதங்கள் நடந்தன. இதில் சிவசேனா தரப்பில் அதிகமான கால அவகாசம் கொடுத்தால் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று வாதம் வைக்கப்பட்டது. அதேசமயம், மத்திய அரசு தரப்பில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிடமுடியாது. 7 நாட்கள் வரை எடுக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை (இன்று) உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தனர்

அதன்பின் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா இன்று வழக்கில் உத்தரவு பிறப்பித்தனர். அதில், "மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி, நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கு முன்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது அதை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏதுவாக இடைக்கால சபாநாயகர் ஒருவரை ஆளுநர் நியமிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இதற்கிடையே சிவசேனா தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் கபில் சிபல், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கும்வரை, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எந்தவிதமான முக்கியமான கொள்கை முடிவுகளையும் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x