Last Updated : 25 Nov, 2019 06:15 PM

 

Published : 25 Nov 2019 06:15 PM
Last Updated : 25 Nov 2019 06:15 PM

மகாராஷ்டிராவில் ரூ. 70 ஆயிரம் கோடி நீர்ப்பாசனத் திட்ட ஊழலில் 9 வழக்குகள் முடிக்கப்பட்டன: காங் கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா: கோப்புப்படம்

புதுடெல்லி

மகாராஷ்டிராவில் ரூ.70 ஆயிரம் கோடி நீர்ப்பாசன ஊழல் வழக்கில் கடந்த இரு நாட்களில் 9 வழக்குகளின் விசாரணை கைவிடப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாஜகவுக்கு என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து புதிய ஆட்சி வந்தபின் இந்த மாற்றம் நடந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு என்சிபி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்பட்டது.இது தொடர்பாக மகாராஷ்டிரா ஊழல் தடுப்பு அமைப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மொத்தம் 3 ஆயிரம் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் என்சிபி கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் மீதும் வழக்குகள் இருக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தபின்தான் நீர்ப்பாசன ஊழல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்து வந்தது. அஜித் பவார் மீதான வழக்குகளைத் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றமே உத்தரவிட்டு இருந்தது.

இந்த சூழலில் மகாராஷ்டிராவில் முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸ், என்சிபி தலைவர் அஜித் பவார் ஆதரவில் பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு விழா நடந்தபின் 2 நாட்களில் நீர்ப்பாசன ஊழல் வழக்கில் 9 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், இந்த தகவலை மகாராஷ்டிரா ஊழல் தடுப்பு அமைப்பு மறுத்துள்ளது. விசாரணை அமைப்பின் டிஐஜி பரம்பீர் சிங் கூறுகையில், " மாநிலத்தில் 9 நீர்ப்பாசன திட்டங்களில் நடந்த முறைகேடு வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.ஆனால், எந்த வழக்கும் அஜித் பவாருக்கு எதிரான வழக்கு அல்ல. நாங்கள் வழக்கை முடித்தமைக்கும், அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இது 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது" என்று விளக்கம் அளித்துள்ளார்

ஆனால், நீர்ப்பாசன திட்ட முறைகேடு வழக்குகள் முடிக்கப்பட்டு வருவது குறித்து காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில் " மகாராஷ்டிராவில் ஜனநாயகக் கொலை நடந்தநிலையில், தற்போது நேர்மை, நம்பகத்தன்மை கொலையும் நடக்கிறது. இதுபற்றி வியப்படையத் தேவையில்லை, பொதுநலன் நோக்கில்தான் பாஜக அஜித் பவார் ஊழல் வழக்குகளை முடிக்க முடிவு எடுத்துள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x