

கடந்த 1978-ம் ஆண்டில் காங்கிரஸ் உடைந்து ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என இரண்டாகப் பிரிந்தது. அப்போது மகாராஷ்டிரா ஸ்தாபன காங்கிரஸின் இளம் தலைவராக சரத் பவார் விளங்கினார்.
கடந்த 1978-ல் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் 69, இந்திரா காங்கிரஸ் 65, ஜனதா கட்சி 99 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஸ்தாபன காங்கிரஸும் இந்திரா காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்தன.
ஸ்தாபன காங்கிரஸை சேர்ந்த வசந்த்தாதா பாட்டீல் முதல்வராகவும் இந்திரா காங்கிரஸை சேர்ந்த நாசிக் ராவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். அப்போது 38 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஸ்தாபன காங்கிரஸை உடைத்து ஆட்சியை கவிழ்த்த சரத் பவார், சமந்தார் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். பின்னர் ஜனதா கட்சி, விவசாய தொழிலாளர் கட்சியின் ஆதரவுடன் மகாராஷ்டிராவின் முதல்வராக சரத் பவார் பதவியேற்றார். அப்போது அவருக்கு 38 வயது. பின்னர் 1980-ல் மத்தியில் இந்திரா காந்தி பிரதமராக பதவியேற்ற பிறகு சரத் பவார் ஆட்சி கலைக்கப்பட்டது.
சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார், தனது சித்தப்பா காட்டிய வழியில் தேசியவாத காங்கிரஸில் தற்போது பிளவை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.