Last Updated : 24 Nov, 2019 06:52 PM

 

Published : 24 Nov 2019 06:52 PM
Last Updated : 24 Nov 2019 06:52 PM

மீண்டும் ரெஹானா பாத்திமா: சபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு கேரள போலீஸிடம் மனு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதாகக் கூறி கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரள பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா இந்த ஆண்டும் சபரிமலைக்குச் செல்ல பாதுகாப்பு கேட்டு போலீஸிடம் மனு அளித்துள்ளார்

ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயிலின் அமைதியைக் குலைக்கும் வகையிலும், விளம்பர நோக்கில் வருபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று பாத்திமா மனுவை நிராகரித்தனர்.

சபரிமலையில் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால், 10 வயதுமுதல் 50 வயதுள்ள பெண்கள் அங்குச் செல்ல காலம் காலமாகத் தடை இருந்துவருகிறது.

ஆனால் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு கேரளமாநில பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அவரை போலீஸார் பாதுகாப்புடன்மலைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், சபரிமலையில் ஐயப்பபக்தர்கள் வழிநெடு கடும் போராட்டம் செய்து மறியல் செய்ததால், பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு பாத்திமாவை கோயிலுக்கு அழைத்துச் செல்லாமல் பாதியிலேயே போலீஸார் பம்பைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதன்பின் சபரிமலை தொடர்பாகச் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பாத்திமா பேசியதால் அவர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்

இந்த சூழலில், சபரிமலை தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவில் கடந்த இருவாரங்களுக்கு முன் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம், கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடைவிதிக்கவில்லை.

ஆனாலும், சபரிமலையில் அமைதியைக் குலைக்கும் வகையில் விளம்பர நோக்கில் வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப் போவதில்லை என்று கேரள அரசு முடிவு செய்தது. இதை தேவஸம்போர்டு அமைச்சர் சுரேந்திரனும் வெளிப்படையாக அறிவித்தார். நீதிமன்ற உத்தரவு பெற்றுவரும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறோம். மற்றவகையில் பெண்களுக்கு சபரிமலைக்கு வந்தால் போலீஸார் பாதுகாப்பு அளிக்கமாட்டார்கள் என்று அறிவித்தார்.

சபரிமலை மண்டல சீசன் தொடங்கியதில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட பெண்களை போலீஸார் பம்பையோடு திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த சூழலில் கேரள பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா சபரிமலைக்குச் செல்ல தனது போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி கொச்சி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்துள்ளார்.

ஆனால், கேரள அரசின் உத்தரவுப்படி சபரிமலை செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், " கேரள அரசின் கொள்கை தெளிவாக இருக்கிறது. தற்போது சபரிமலை விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நீதிமன்றம், தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித்தான் அதிக எண்ணிக்கை கொண்ட அமர்வுக்கு மாற்றியுள்ளது. ஆதலால், இந்த சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று பாத்திமாவிடம் தெரிவித்துவிட்டோம்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவந்தால் போலீஸார் பாதுகாப்பு அளிப்பார்கள். விளம்பர நோக்கில் வரும் ஆர்வலர்கள், பெண்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சட்டரீதியாக அரசுக்கு எந்தவிதமான நிர்பந்தமும் இல்லை " எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x