Last Updated : 24 Nov, 2019 04:19 PM

 

Published : 24 Nov 2019 04:19 PM
Last Updated : 24 Nov 2019 04:19 PM

பெரும்பான்மை நிரூபிப்பதில் இருந்து பாஜக தப்பி ஓட பார்க்கி்றது: காங்கிரஸ் கிண்டல்

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவி்ஸ் , துணை முதல்வர் அஜித் பவார் : படம் பிடிஐ

புதுடெல்லி

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இல்லாததால், பாஜக தப்பி ஓடப் பார்க்கிறது என்று காங்கிரஸ் கிண்டலாக விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் பாஜகவுக்கு, என்சிபி கட்சியின் தலைவர் அஜித் பவார் ஆதரவு அளித்தார். இதையடுத்து, நேற்று காலை முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார், பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை, அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், சட்டப்பேரவைக் குழுத்தலைவர் பதவியிலிருந்தும் அஜித் பவாரை நீக்கினார்.

இவர்கள் இருவருக்கும் ஆளுநர் கோஷியாரி எந்த அடிப்படையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்றும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரிடம் முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை நாளை வழங்க வேண்டும் என்றும், நாளை உத்தரவு பிறப்பிப்போம் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " பாஜகவும், அஜித் பவாரும் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது எனத் தெரிந்து தப்பி ஓடப் பார்க்கிறார்கள். ஆனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது.

எங்களுடைய கோரிக்கை மிகவும் எளிதானது. சட்டப்பேரவையைக் கூட்டுங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம், யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறதோ அவர்கள் ஆட்சியில் அமரட்டும். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது எனத் தெரிந்து வெட்கப்பட்டு அஜித் பவாரும், பாஜகவும் ஒளிகிறார்கள்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டவுடன், எங்களுடைய பெரும்பான்மை நிரூபிப்போம். அதேபோல பாஜக நள்ளிரவில் ஆளுநர் மாளிகையைப் பயன்படுத்தி சட்டவிரோதமான அரசை அமைக்க நடத்திய ரகசிய நடவடிக்கையையும் வெளிப்படுத்துவோம் " எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x