

மகாராஷ்டிர அரசியலில் இன்று ஏற்பட்ட திருப்பத்தில் அஜித் பவார் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் குறித்த பின்னணி தகவல்கள்:
மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக இன்று பதவி ஏற்றுள்ள அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன்.
சரத்பவார் குடும்பத்தின் செல்வாக்கு மிக்க பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இவர் திடீரென எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அஜித் பவாருக்கும், சரத் பவாருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டதா என கேள்வி எழுந்தது.
மகாராஷ்டிரா வங்கி ஊழல் வழக்கில் மும்பை போலீஸார் அஜித்பவார் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் அவர் மீதும், சரத்பவார் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது. இதன் பின்னணியில் அஜித்பவார் ராஜினாமா செய்தாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் சரத் பவாரை சந்தித்து பேசிய அஜித் பவார் கட்சிக்கும், தனது கட்சித் தலைவர் சரத் பவாருக்கும் தர்ம சங்கடம் ஏற்படுவதை தவிர்க்க ராஜினாமா செய்ததாக கூறி செய்தியாளர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் அக்டோபர் மாதம் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் மீண்டும் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது திடீர் திருப்பமாக பாஜகவுக்கு அவர் ஆதரவு தந்துள்ளார். சரத் பவாரின் முடிவுக்கு எதிராக பிரிந்து சென்று பாஜகவை ஆதரித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
சரத் பவாரின் குடும்ப தொகுதியான பாரமதி மக்களவைத் தொகுதியில் அவரது சொந்த மகளான சுப்ரியா சுலே எம்.பி.யாக உள்ளார். பாரமதி சட்டப்பேரவைத் தொகுதியில் அஜித் பவார் எம்எல்ஏவாக உள்ளார். சரத் பவாரின் அரசியல் வாரிசுகளான இருவருக்கும் நெருடல்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.