Published : 23 Nov 2019 11:25 AM
Last Updated : 23 Nov 2019 11:25 AM

எம்எல்ஏக்களிடம் வருகைப்பதிவுக்காக வாங்கிய கையெழுத்தை தவறாக பயன்படுத்தி விட்டனர்: என்சிபி குற்றச்சாட்டு

எம்எல்ஏக்களிடம் வருகைப்பதிவுக்காக வாங்கிய கையெழுத்தை ஆளுநரிடம் தவறான முறையில் காட்டி ஆட்சியமைத்து விட்டார் என அஜித் பவார் மீது அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தசூழலில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.

ஆனால் இது அஜித் பவாரின் முடிவு, இதில் தேசியவாத காங்கிரஸூக்கு உடன்பாடில்லை என சரத் பவார் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் இதுகுறித்து கூறியதாவது:

‘‘தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏக்களிடன் வருகைப்பதிவை உறுதி செய்தற்காக கையெழுத்து வாங்கினோம்.

ஆனால் அந்த கையெழுத்தை ஆட்சியமைக்க ஒப்புதல் அளித்ததாக தவறாக கடிதமாக எழுதி அஜித் பவார் மோசடி செய்து விட்டார். ஆளுநரிடம் இதனை காட்டி ஆட்சியமைத்து விட்டனர். ஆளுநருக்கு அனுப்பட்ட கடிதத்தில் இந்த கையெழுத்தே இடம் பெற்றுள்ளது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x