Published : 23 Nov 2019 10:42 AM
Last Updated : 23 Nov 2019 10:42 AM

துரோகம் செய்தது சிவசேனா தான்: பாஜக விமர்சனம்

மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தார்கள், ஆனால் அந்த முடிவுக்கு எதிராக துரோகம் செய்தது சிவசேனா தான் என பாஜக விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தசூழலில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி் அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.

ஆனால் இது அஜித் பவாரின் முடிவு, இதில் தேசியவாத காங்கிரஸூக்கு உடன்பாடில்லை என சரத் பவார் அறிவித்துள்ளார். பாஜகவின் இந்த முடிவை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கூறியதாவது:

‘‘மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தார்கள். எங்களுக்கு 161 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால் மக்கள் முடிவுக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க சிவசேனா முற்பட்டது. மக்கள் முடிவுக்கு எதிராக செயல்பட்டது.

சிவசேனா தான் துரோகம் செய்தது. நடந்த அரசியல் குழப்பங்களுக்கு முழு காரணமும் சிவசேனா தான். இப்போது குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிப்போம். சஞ்சய் ராவத் இனிமேலாவது அமைதியாக இருக்க வேண்டும். சிவசேனாவை அழித்தவர் அவர்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x