Published : 23 Nov 2019 10:23 AM
Last Updated : 23 Nov 2019 10:23 AM

அஜித் பவார் துரோகம் செய்து விட்டார்: சிவசேனா சாடல்

மகாராஷ்டிராவுக்கு அஜித் பவார் துரோகம் செய்து விட்டார், சரத்பவாரும், உத்தவ் தாக்கரேயும் சந்தித்து பேசுவார்கள் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை :உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தசூழலில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.

ஆனால் இது அஜித் பவாரின் முடிவு, இதில் தேசியவாத காங்கிரஸூக்கு உடன்பாடில்லை என சரத் பவார் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு சிவசேனா சார்பில் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

‘‘மகாராஷ்டிராவுக்கு அஜித் பவார் துரோகம் செய்து விட்டார். சத்ரபதி சிவாஜிக்கும் அவர் துரோகம் செய்து விட்டார். மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழல் குறித்து சரத்பவாரும், உத்தவ் தாக்கரேயும் சந்தித்து பேசுவார்கள். இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசுவார்கள்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x