Published : 23 Nov 2019 10:17 AM
Last Updated : 23 Nov 2019 10:17 AM
புதுடெல்லி
ரயில்வே தனியார்மயமாகாது, பயணிகளின் சிறப்பான சேவைக்காக ஒருசில பணிகள் மட்டுமே தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநிலங்களவையில் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: ரயில்வேயை மத்திய அரசு தனியார்மயமாக்காது. அதுபோன்ற எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால், பயணிகளின் சிறப்பான சேவைக்காக வர்த்தகம் மற்றும் ரயில் பயணத்தின் போதான சேவைகளுக்காக ஒரு சில பணிகள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். ரயில்வேத்துறையை நடத்த அடுத்த 12 ஆண்டுகளுக்கு ரூ.50 லட்சம் கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை சமாளிக்க பயணிகள் சேவை தொடர்பான சில பணிகள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
பயணிகளுக்கு சிறப்பான சேவையும் பயன்களும் அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இந்திய ரயில்வே எப்போதும் இந்திய மக்களின் சொத்தாகவே தொடரும். வர்த்தகம் மற்றும் ரயில் பயணத்தின் போதான சேவைகளை மட்டுமே தனியாருக்கு அளிக்கிறோம். உரிமையாளர் பொறுப்பு ரயில்வேயிடம் இருக்கும். தனியாருக்கு உரிமம் மட்டுமே கொடுக்கிறோம். இதனால், ரயில்வே தொழிலாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT