Published : 22 Nov 2019 05:18 PM
Last Updated : 22 Nov 2019 05:18 PM

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில்; காங்கிரஸின் விருப்பம்: சச்சின் பைலட் கருத்து

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பம் என ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் கூறினார்.

நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடி விவாதித்தது. தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு தெரிவித்தது.

எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, ஷியா வக்போர்டு ஆகியவை மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சச்சின் பைலட் கூறியதாவது:

‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதியளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் வரவேற்கிறார்கள். அங்கு பிரமாண்டமான ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம். இந்த தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

ராஜஸ்தானில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியின் மூலம் மக்கள் ஆதரவு மீண்டும் நிருபணமாகியுள்ளது. மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலரும் சூழல் உள்ளது. விரைவில் நாடுமுழுவதும் இது எதிரொலிக்கும்.’’
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x