அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு உறுப்பினர்கள் வலியுறுத்தல்

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு உறுப்பினர்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என உத்தர பிரதேச மாநில மத்திய சன்னி வக்போர்டு தலைவர் பரூக்கி தன்னிச்சையாக அறிவித்துள்ளதாக அதன் உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடி விவாதித்தது. தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு தெரிவித்தது.

எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, ஷியா வக்போர்டு ஆகியவை மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன. இதுபற்றி உ.பி. மத்திய சன்னி வக்போர்டு தலைவர் சுபர் பரூக்கி கூறுகையில் ‘‘எங்களை பொறுத்தவரை இந்த வழக்கின் தீர்ப்பை முழுமையாக ஏற்கிறோம்.

மறு சீராய்வு செய்ய வலியுறுத்த மாட்டோம் என்பதை முன்பே தெளிவுபடுத்தி விட்டோம். அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் முடிவில் எங்களுக்கு உடன்பாடில்லை’’ எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் அயோத்தி வழக்கில் சுபர் பரூக்கி தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டதாக உ.பி. மத்திய சன்னி வக்போர்டு மூத்த உறுப்பினர் அப்துல் ரசாக் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து சன்னி வக்போர்டு நவம்பர் 26ம்- தேதி கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என பரூக்கி தன்னிச்சையாக அறிவித்துள்ளார். வக்போர்டு அனைத்து உறுப்பினர்களும் கலந்து பேசிய பிறகே முடிவெடுக்க முடியும்’’ எனக் கூறினார்.

இதுபோலவே மற்றொரு உறுப்பினரான இம்ரான் மஹபூப் கான் கூறுகையில் ‘‘அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் முடிவை முஸ்லிம் மக்கள் வரவேற்றுள்ளனர். எனவே அதே முடிவை சன்னி வக்போர்டும் எடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in