Last Updated : 21 Nov, 2019 04:35 PM

 

Published : 21 Nov 2019 04:35 PM
Last Updated : 21 Nov 2019 04:35 PM

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது: மக்களவையில் ஜல் சக்தி துறை அமைச்சர் திட்டவட்டம்

கேரளா மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. அணைக்கு அருகே புதிய அணைகட்ட
கேரள அரசும், தமிழக அரசும் ஒப்புக்கொண்டால் மத்திய அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் தெரிவித்தார்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து கேரள மாநிலம் இடுக்கி காங்கிரஸ் எம்.பி. குரிய கோஷ் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்தார் அவர் பேசியதாவது:

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய நீர் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட மத்திய அரசின் தலைமைப் பொறியாளர், தமிழகம், கேரள அரசின் இரு உறுப்பினர்கள் என் 3 பேர் கொண்ட குழு கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையைப் பார்வையிட்டார்கள். அணைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடத்தியுள்ளார்கள், நீர்பிடிப்பு பகுதிகள், கருவிகளின் செயல்பாடு, வளைவுப்பகுதி, நீர் வருகை கணக்கீடு முறை ஆகியவை குறித்து ஆலோசித்தனர்.

இந்த ஆலோசனையின் முடிவில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. அணைக்கு அருகே புதிய அணையைக் கட்டுவதற்கு கேரள அரசும், தமிழக அரசும் ஒப்புக்கொண்டால் மத்திய அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.

முல்லைப்பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதற்கான, முன்கட்டுமான திட்டங்களைத் தயாரிக்கச் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு, மேலாண்மை திட்ட அறிக்கை தயாரிக்க சில நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் குறிப்புகளை வழங்கியுள்ளது.

பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்கள், பன்முக பயன்பாடு திட்டங்கள் இருமாநிலங்களுக்கும் இடையே செல்லும் நதிகளில் அமைந்துள்ளன. அந்த திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெறவும், தொழில்நுட்ப, பொருளாதார திட்டமதிப்பிட்டீற்காக மத்திய நீர் ஆணையத்திடம் மாநில அரசுகள் அறிக்கை அளித்துள்ளன. ஜல்சக்தியின் நீர்ப்பாசனம், வெள்ளக்காட்டுப்பாடு, பன்முக திட்டங்களுக்கான ஆலோசனைக் குழு அதை ஏற்றுக்கொண்டுள்ளது

கடந்த 2016 ஏப்ரல் மாதத்தில் இருந்து புதிய அணை கட்டுவது தொடர்பாக 13 திட்ட அறிக்கைகள் மதிப்பீட்டிற்காக வந்துள்ளன. இதில் 2 திட்டங்களுக்கு மத்திய நீர் ஆணையம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. அதில் கேரளாவில் உள்ள அட்டபாடி பள்ளத்காக்கு நீர் பாசனத்திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்கள் சில ஆலோசனைகளுடன் திருப்பி அனுப்பப்பட்டன.
இவ்வாறு அமைச்சர் ஷெகாவத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x