Published : 21 Nov 2019 04:14 PM
Last Updated : 21 Nov 2019 04:14 PM

சிதம்பரத்திடம் 2 நாட்கள் விசாரணை: அமலாக்கப்பிரிவுக்கு  நீதிமன்றம் அனுமதி

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்திடம் நாளை மறுதினமும் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

எனினும் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர். சிதம்பரத்துக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கீழ் நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்து விட்டன. இதைத்தொடர்ந்து ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்திடம் 2 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு சார்பில் அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அஜய் குமார் குஹர், நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 22, 23) திஹார் சிறைக்குச் சென்று சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

இரு தினங்களும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பின்னர் பிற்பகல 2.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சிதம்பரத்திடம் விசாரணை நடத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x