Last Updated : 21 Nov, 2019 12:42 PM

 

Published : 21 Nov 2019 12:42 PM
Last Updated : 21 Nov 2019 12:42 PM

சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச, ரோஹிங்கியா மக்களை நாடு கடத்தும் மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த, ஊடுருவிய வங்கதேச மக்கள், ரோஹிங்கியா இனத்தவர் உள்ளிட்டோரை நாடு கடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

பாஜக நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

''மியான்மர் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஏஜென்ட்கள் மூலல் ரோஹிங்கியா மக்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பேனேபோல்-ஹரிதாஸ்பூர், ஹில்லி ஆகிய பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார்கள். இதுமட்டுமல்லாமல் திரிபுராவின் சோனாமோரா, கொல்கத்தா, கவுகாத்தி ஆகிய பகுதிகள் வழியாகவும் வங்கதேசத்து மக்களும் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளார்கள்.

இவர்கள் இந்தியர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குகின்றனர். வங்கதேசம், மியான்மரில் இருந்து வந்துள்ள சட்டவிரோத குடியேறிகள், எல்லையோர மாவட்டங்களுக்கு அச்சுறுத்தலாக மட்டுமல்லாமல், தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்தினர் மட்டும் சட்டவிரோதமாக 40 ஆயிரம் பேர் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாக குடியேறியுள்ள, ஊடுருவியுள்ள இவர்களை அடையாளம் கண்டு கைது செய்து மாநில அரசுகளும், மத்திய அரசும் நாடு கடத்த உத்தரவிட வேண்டும்".

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சூர்ய காந்த் ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்த நீதிபதிகள் உடனடியாக விசாரிக்க இயலாது. 4 வாரங்களுக்குப் பின் விசாரிக்கிறோம் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x