Published : 21 Nov 2019 11:01 AM
Last Updated : 21 Nov 2019 11:01 AM

அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமிகள் மீட்பு: நித்யானந்தா ஆசிரமத்தின் 2 பெண் மேலாளர்கள் கைது

குஜராத் உயர் நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவரும், அவரது மனைவியும் மனு ஒன்றை அண்மையில் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:

பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் எங்கள் மகள்கள் லோகமுத்ரா, நந்திதா ஆகியோர் 2013-ம் ஆண்டு முதல் படித்து வந்தனர். பின்னர் இருவரும் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா கல்வி நிறுவனத்தின் கிளைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்பட்டனர்.

தற்போது எங்கள் மகளைப் பார்க்கச் சென்றால் ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்க மறுக்கின்றனர். எங்கள் மகள்கள் கடத்தப்பட்டு, சட்ட விரோதமாக அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே எங்கள் மகள்களை மீட்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு நீதிமன்றம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரமத்தைச் சேர்ந்த பிராணபிரியா, பிரியத்வா ஆகிய 2 பெண் மேலாளர்களை அகமதாபாத் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். மேலும் ஆசிரமம் முழுவதும் போலீஸார் சோதனையும் நடத்தி 2 சிறுமிகளையும் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து அகமதாபாத் நகர போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.வி.அசாரி கூறும்போது, “பெண் மேலாளர்கள் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 2 பெண்களையும் மீட்டு அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x