கடல் அரிப்பு தீர்வுக்கு நீண்டகாலத் திட்டம் தேவை: மக்களவையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

கடல் அரிப்பு தீர்வுக்கு நீண்டகாலத் திட்டம் தேவை: மக்களவையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
Updated on
1 min read

கடல் அரிப்பால் கடற்கரைப் பகுதிகள் இழப்பு தொடர்கதையாவதைத் தடுக்க நீண்டகாலத் திட்டம் தேவை என மக்களவையில் திமுக எம்.பி.யான கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மக்களவை திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான அவர் இன்று பூஜ்ஜிய நேரத்தில் பேசினார்.

இது குறித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:

''இந்தியா தனது கடற்கரைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை கடல் அரிப்பின் காரணமாக இழந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 41% கடற்கரைப் பகுதிகள் கடல் அரிப்பின் காரணமாக கடலுக்குள் போய்விட்டன.

எனது தொகுதியான தூத்துக்குடி அதிக அளவு கடற்கரைப் பரப்பைக் கொண்டிருக்கிறது. அங்கே நூற்றுக்கணக்கான மீனவ கிராமங்கள் இருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்குள் மீனவ கிராமங்களில் பாதியளவுக்கு கடலுக்குள் போயிருக்கின்றன.

இது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல். அரசாங்கம் கடல் அரிப்பைத் தடுக்க சுவர்கள் கட்டுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இது தற்காலிகமான நடவடிக்கைதான். இந்தியா முழுவதும் நிலவும் இதுபோன்ற அசாதாரண கடற்கரைச் சூழலில் கடல் அரிப்பைத் தடுத்து கடற்கரையையும், மீனவர்களையும் காப்பாற்ற நீண்டகாலத் திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசின் திட்டம் என்ன என்பதை அறிவிக்க வேண்டும்''.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in