Last Updated : 20 Nov, 2019 08:36 PM

 

Published : 20 Nov 2019 08:36 PM
Last Updated : 20 Nov 2019 08:36 PM

விவசாயி கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பதில் 

நரேந்திரசிங் தோமர்.

புதுடெல்லி

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார். மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா? விவசாயிகள் பெற்ற கடன்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் எவ்வளவு தொகையை அரசாங்கம் தள்ளுபடி செய்திருக்கிறது? விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுப்பதற்கு அவர்களுக்கு உளவியல் ரீதியான மருத்துவ உதவி வழங்கும் திட்டம் உள்ளதா? என ரவிக்குமார் எம்.பி. விவசாயத் துறை அமைச்சரிடம் கேட்டிருந்தார்.

ரவிக்குமார் எம்.பி.

இது குறித்து மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், ''விவசாயிகள் தற்கொலை குறித்த விவரங்களை உள்துறை அமைச்சகம் சேகரிக்கிறது. 2016 ஆம் ஆண்டு வரையிலான விவரங்கள் தேசிய குற்ற ஆவண மையத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையில் தரப்பட்டுள்ளன.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. விவசாயத்துறை என்பது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகள்தான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில், மத்திய அரசு அவர்களுக்கு உதவி மட்டுமே செய்ய முடியும்'' என்று தெரிவித்தார்.

விழுப்புரம் தொகுதி எம்.பி.யான ரவிக்குமார் எழுப்பிய கேள்விகளில், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குறித்த விவரங்களையோ, கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன்கள் எவ்வளவு என்பதைப் பற்றியோ அமைச்சர் தனது அறிக்கையில் பதில் எதுவும் கூறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x