பரூக் அப்துல்லா கைது பற்றி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்

பரூக் அப்துல்லா கைது பற்றி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்
Updated on
1 min read

பரூக் அப்துல்லா கைது பற்றி நாடாளுமன்றத்துக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசுக்கு மக்களவையில் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதை அக்கட்சி சார்பில் தென்சென்னை தொகுதி எம்.பியான தயாநிதி மாறன் இன்று மக்களவையில் பதிவு செய்தார்.

இது குறித்து மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் தயாநிதி மாறன்பேசியதாவது:

''ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற எம்.பி.யுமாகிய பரூக் அப்துல்லா, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமான வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதி எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அமர்வில் வந்தபோது பரூக் அப்துல்லா உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பிலும் காஷ்மீர் அரசுத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதுபோல், எந்த ஒரு உறுப்பினரையும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் முறையாக இம்மன்றத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

ஆனால், சபாநாயகருக்கும் இப்பேரவைக்கும் உரிய முறையில் தகவலைத் தெரியப்படுத்த வேண்டிய மத்திய அரசு சம்பந்தப்பட்ட உறுப்பினர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அவர் உறுப்பினராக இருக்கக் கூடிய நாடாளுமன்றத்திற்குத் தகவல் அளிக்காதது ஏன்?

இது நாடாளுமன்ற விதிகளை மீறும் செயல் மட்டுமல்ல, பேரவையின் சபாநாயகரை அவமதிக்கும் செயல் ஆகும். இதுபோன்ற செயல்கள் மக்களவையின் மாண்பினைக் குலைக்கும் செயல் ஆகும். இதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in