Last Updated : 20 Nov, 2019 06:46 PM

 

Published : 20 Nov 2019 06:46 PM
Last Updated : 20 Nov 2019 06:46 PM

மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அமைக்க கோரிக்கை: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுடன் சு.வெங்கடேசன், வைகோ சந்திப்பு

புதுடெல்லி

மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடாவுடன் மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ சந்திப்பு நடத்தினர்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன், மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

''வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் 1998-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 'தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம்' (என்ஐபிஇஆர்) ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும். இந்த என்ஐபிஇஆர், இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துசார் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

இது, உயர்நிலைக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக ஒரு சிறப்பு மையத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மருந்துசார் அறிவியல் துறையில் முதல் தேசிய நிறுவனமாக உருவாக்கப்பட்டது. பிறகு, ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக பிரகடனப்படுத்தப்பட்ட என்ஐபிஇஆர், இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்குச் சமமான அந்தஸ்தைக் கொண்டது.

மருந்துசார் அறிவியலில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தர அடையாளமாக உருவாக்கும் ஒரு பார்வையுடனும், மருந்துசார் தொழில் வளர்ச்சிக்காகவும், இந்திய மக்களின் நலனுக்காகவும் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை உருவாக்குவது கட்டாயமாகும்.

தற்போது நாடு முழுவதும் 7 தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள் உள்ளன. முதல் கழகம் 1998-ல் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு மற்ற 6 கழகங்கள் 2007 முதல் 2008 ஆம் ஆண்டிற்குள் அகமதாபாத், கவுகாத்தி, ஐதராபாத், ஹாஜிபூர் (பிஹார்), கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டன.

ஜனவரி 20, 2011 அன்று நடைபெற்ற எட்டாவது நிதி ஆணையத்தின் கூட்டத்தில் இதர 5 கழகங்களுடன் மதுரையில் ஒரு தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை உருவாக்கப் பரிந்துரை செய்யப்பட்டது.

தற்போது தென்னிந்தியாவில் இது போன்ற முதன்மையான ஆராய்ச்சிக் கழகம் இல்லாத நிலையில் மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்குவது பொதுவாக இந்தியாவிற்கும், குறிப்பாக தென்னிந்தியாவிற்கும் உதவிடும்.

தமிழக அரசு மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அமைப்பதற்கு என 116 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஏற்கெனவே ஒதுக்கியுள்ளது.

மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் மாணவர் சேர்க்கையினைத் தொடங்கும் வகையில், மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், நிதி ஆயோக் ஆகியவை உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்''.

இவ்வாறு சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x