‘‘ஹைதராபாத்தில் இருந்து பணமூட்டையுடன் வரும்  பாஜக தோழர்கள்’’ - ஒவைசி மீது மம்தா மீண்டும் கடும் தாக்கு

‘‘ஹைதராபாத்தில் இருந்து பணமூட்டையுடன் வரும்  பாஜக தோழர்கள்’’ - ஒவைசி மீது மம்தா மீண்டும் கடும் தாக்கு

Published on

முஸ்லிம்களின் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து பண மூட்டையுடன் வரும் சில தலைவர்கள் பாஜகவின் தோழர்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

மேற்குவங்க மாநிலம் கூச் பிஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசுகையில் ‘‘இந்துக்களில் ஒரு சிலரிடம் தீவிரவாத போக்கு இருப்பதுபோலவே தற்போது சிறுபான்மை மக்களிடமும் ஒரு சிலரிடம் இந்த போக்கு உள்ளது.

இதற்காகவே சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இந்த கட்சிகள் பாஜகவிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிக்கப் பார்க்கின்றன. ஆனால் அவர்கள் மேற்குவங்கத்தில் இல்லை, ஹைதராபாத்தில் இருக்கின்றனர்’’ என பேசினார்.

இதற்கு ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி பதிலளித்தார். அவர் கூறுகையில் ‘‘மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு தகவலை கூறியுள்ளார். அந்த மாநிலத்தில் எங்கள் கட்சி அசைக்க முடியாத சக்தி என்பதால் பயப்படுகிறார்.’’ எனக் கூறினார்.

இதனால் இருகட்சிகள் இடையே அரசியல் மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி மீண்டும் ஒவைசி கட்சியை கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் பேசியதாவது:

‘‘வெளியில் இருந்து வந்து சிறுபான்மை மக்களின் காவலர்களாக காட்டிக்கொள்ளும் தலைவர்களை நம்பக்கூடாது. மேற்குவங்கத்தை சேர்ந்த தலைவர்களால் மட்டுமே உங்களுக்காக போராட முடியும்.

முஸ்லிம்களின் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து பண மூட்டையுடன் வரும் சில தலைவர்கள் பாஜகவின் தோழர்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.’’
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in