Published : 20 Nov 2019 11:59 AM
Last Updated : 20 Nov 2019 11:59 AM

சிதம்பரம் ஜாமீன் மனு: அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு அமலாக்கப்பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர். இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், சிதம்பரம் தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் மூலம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க இயலாது, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற விஷயத்தில் முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன எனக் கூறி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப்பிரிவு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார்.

சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் ஆஜராகினார். இந்த வழக்கில் நவம்பர் 25-ம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய அமலாக்கப்பிரிவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x