Published : 19 Nov 2019 06:37 PM
Last Updated : 19 Nov 2019 06:37 PM

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு: மேலும் 4 பேர் முடிவு

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடி விவாதித்தது. தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு தெரிவித்தது.

எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டது.. அதுபோலவே முதன்முதலில் வழக்கு பதிவு செய்த மனுதாரரின் வாரிசான இக்பால் அன்சாரி உள்ளிட்டாரும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என அறிவித்து விட்டனர்.

அதேசமயம் மனுதாரர்களில் முகமது உமர், மிஸ்பகுதீன், மவுலானா மஹபூப் ரஹ்மான் உள்ளிட்டோரும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தனர்.

இந்தநிலையில் மேலும் 4 பேர் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஹாஜி மஹபூப், ஹாஜி ஆசாத், ஹபீஸ் ரிஸ்வான், மவுலானா ஹிஸ்புல்லா ஆகிய 4 பேரும் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் முடிவை ஏற்று தாங்களும் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x