

ஹைதராபாத்தைச் சேர்ந்த சிலர் தீவிரவாத போக்குடன் இருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ள நிலையில் அதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கூச் பிஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது:
இந்துக்களில் ஒரு சிலரிடம் தீவிரவாத போக்கு இருப்பதுபோலவே தற்போது சிறுபான்மை மக்களிடமும் ஒரு சிலரிடம் இந்த போக்கு உள்ளது.
இதற்காகவே சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இந்த கட்சிகள் பாஜகவிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிக்கப் பார்க்கின்றன. ஆனால் அவர்கள் மேற்குவங்கத்தில் இல்லை, ஹைதராபாத்தில் இருக்கின்றனர்’’ என பேசினார்.
இதற்கு ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘மம்தா பானர்ஜி என் மீது குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம் மேற்குவங்கத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு தகவலை கூறியுள்ளார். அந்த மாநிலத்தில் எங்கள் கட்சி அசைக்க முடியாத சக்தி என்பதையும், வளர்ந்து வரும் பெரும் அரசியல் கட்சி என்பதையும் அவர் உணர்ந்துள்ளார்.
இதன் காரணமாகவே அவர் எங்களை விமர்சிக்கிறார். இதுபோன்ற அவரது விமர்சனத்தின் மூலம் அவரது பயம் தெரிகிறது.’’ எனக் கூறியுள்ளார்.