Last Updated : 18 Nov, 2019 01:09 PM

 

Published : 18 Nov 2019 01:09 PM
Last Updated : 18 Nov 2019 01:09 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத் தாக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது

டெல்லி உயர் நீதிமன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர். இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த வழக்கில் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் கடந்த புதன்கிழமை அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், சிதம்பரம் தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் மூலம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க இயலாது, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற விஷயத்தில் முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன எனக் கூறி தள்ளுபடி செய்தார். இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவிஏற்றபின் நீதிமன்றத்துக்கு வந்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் சிதம்பரம் ஜாமீன் மனுவை அவரின் வழக்கறிஞரும்,காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் தாக்கல் செய்தார்.

அப்போது, தலைமை நீதிபதி போப்டேயிடம், " சிதம்பரம் 90 நாட்களாக சிறையில் இருக்கிறார். அவரின் ஜாமீன் மனு உடனடியாக விசாரிக்க வேண்டும்" எனக் கோரினார். அதற்கு தலைமை நீதிபதி போப்டே " சரி நாளை அல்லது நாளை மறுநாள் நாங்கள் விசாரிக்கிறோம்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x