Published : 18 Nov 2019 10:37 AM
Last Updated : 18 Nov 2019 10:37 AM

டிக்கெட் கிடைக்காததால் அதிருப்தி: ஜார்க்கண்ட் முதல்வருக்கு எதிராக அமைச்சர் சரயு போட்டி

ஜாம்ஷெட்பூர்

ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர்தாஸ் தாஸுக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும், அமைச்சருமான சரயு ராய் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் 72 பேர் கொண்ட பாஜக வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடம் நேற்று அறிவித்தது. இதில் அமைச்சர் சரயு ராயின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த சரயு ராய், முதல்வரும், ஜார்க்கண்ட் மாநில பாஜகவின் மூத்த தலைவருமான ரகுவர் தாஸை எதிர்த்து களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “ஜாம்ஷெட்பூர் (கிழக்கு), ஜாம்ஷெட்பூர் (மேற்கு) ஆகிய 2 தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவேன். முதல்வருக்கு எதிராக களமிறங்க நான் தயாராகிவிட்டேன். மனு தாக்கல் செய்யும் தினத்தில் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்” என்றார்.

சொந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரே முதல்வருக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது ஜார்க்கண்ட் மாநில பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. - பிடிஐw

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x