Published : 15 Nov 2019 05:42 PM
Last Updated : 15 Nov 2019 05:42 PM

வனச்சட்டத் திருத்த வரைவு வாபஸ்: பிரகாஷ் ஜவடேகர் தகவல்

வனப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்வது குறித்த பழங்குடியினரின் கவலையைப் போக்க முடியாததால், இந்திய வனச் சட்டத்தில் மேற்கொள்ள இருந்த வரைவுத் திருத்தங்களை மத்திய அரசு இன்று திரும்பப் பெற்றது.

வனப்பகுதிகளிலிருந்து பழங்குடியினரை இடம்பெயர வைப்பது தொடர்பாக இந்திய வனச் சட்டம் 1927-ல் சில சாத்தியமான திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான வரைவுப் பணிகளிலும் ஈடுபட்டது.

எனினும் இச்சட்டத் திருத்தம் தொடர்பாக பழங்குடியினரின் கவலையைத் தணிக்க இயலாத நிலையில் அவர்களுக்கு எதிரானதாக அமைய வாய்ப்பிருப்பதை உணர்ந்த மத்திய அரசு வரைவை வாபஸ் பெற்றது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

''வனத்துறை சட்டத் திருத்தத்துக்கான வரைவு, தங்கள் வன உரிமைகளைப் பறிக்க முற்படுவதை பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளிடையே தவறான புரிதல்களை உருவாக்கும் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது.

உண்மையில், வனத்தில் உள்ள பழங்குடியினரின் உரிமைகளைப் பறிப்பதை விட அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே அரசாங்கம் முயல்கிறது. ஆனால், இது தவறாக புரிந்துகொள்ளப்படுவதை நினைத்து வேதனையாக இருக்கிறது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, சட்டத் திருத்த வரைவு திரும்பப் பெறப்படுகிறது. எதிர்க்கட்சியால் இச்சட்டத் திருத்தம் பழங்குடியினருக்கு எதிரானது என்று குற்றம் சாட்டப்படக்கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது.

இது பல்வேறு மாநிலங்களில் வனச் சட்டங்களை சீரமைப்பதற்கான விவாதங்களுக்காக அமைச்சக அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட வரைவு மட்டுமே. நான்கு முறைக்கு மேலாகவும் இதை தெளிவுபடுத்தியபோதிலும் தவறான எண்ணம் தொடர்ந்ததால், வரைவை திரும்பப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளது .

பழங்குடியினரின் உரிமைகளுக்கு மோடி அரசு இடையூறு செய்ய விரும்பவில்லை. மாறாக, நில உரிமையாளர் உரிமைகள், வளர்ச்சித் திட்டங்களுக்கான பழங்குடியினருக்கான நிதி அதிகரிப்பு, சுரங்கத்தில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் மாவட்ட சுரங்க நிதியை உருவாக்குதல், வன உற்பத்திகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக செயல்படுகிறது என்பதை இரண்டு சந்தர்ப்பங்களின்போது மக்களவையில் நான் தெரிவித்தேன்.

வனப்பகுதியின் தடத்தை மேம்படுத்துவதில் பழங்குடியினரும் வனவாசிகளும் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இல்லாமல் அது சாத்தியமில்லை. அதிகாரிகள் தயாரித்த வரைவு, பல்வேறு வனச் சட்டங்களை ஒரே வரைவில் சேர்க்க முடியும் என்பதைக் காணும் முயற்சி மட்டுமே.

ஆதிவாசி சட்டங்களை மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. தொடர்ந்து தவறான புரிதல் மற்றும் தவறான எண்ணம் இருப்பதால், அரசாங்கம் இன்று (வெள்ளிக்கிழமை) வரைவை வாபஸ் பெற்றது''.

இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x